புதுதில்லி: வர இருக்கும் 75 ஆவது சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி ஆற்ற இருக்கும் உரையில் உங்களின் கருத்துக்கள் இடம்பெறும் வகையில் மக்கள் தங்களின் கருத்துக்களை அனுப்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தில்லியில் உள்ள செங்கோட்டையில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம்.
பிரதமரின் உரை மற்றும் விழா தூர்தர்ஷனின் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடு காரணமாக, சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் வெகுவாக குறைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்ற இருக்கும் உரையின் ஒரு பகுதியாக மக்களிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் தங்களின் கருத்துக்களை அனுப்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், "உங்கள் கருத்துக்கள், எண்ணங்கள் செங்கோட்டை கொத்தளத்தில் எதிரொலிக்கட்டும்.
ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆற்ற இருக்கும் உரையில் உங்கள் பங்கு என்ன? என்பதை ‘மைகவ்இந்தியா’ MyGov (@mygovindia) வலைதளத்தில் பகிருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது.