புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சரவை அமைவதில் தொடர் இழுபறி நிலவி வந்த நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் பதவி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 33 இடங்களில் 30 இடங்களுக்கானத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை பெற்று என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் மாநில சட்டப்பேரவையில் சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு மற்றும் நியமன எம்எல்ஏக்கள் மூலம் பாஜகவின் பலம் 12ஆக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அமைச்சரவையில் பாஜக பங்கீடு கேட்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சரவை அமைக்கப்படாமல் தொடர் இழுபறி நிலவி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் நமச்சிவாயம் சாமிநாதன் தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன், புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு மூன்று நாள்களில் அமைச்சரவை பதவியேற்கும் எனவும் தெரிவித்தார்.