அரக்கோணம்: அரக்கோணத்தில் சிறையிலிருந்து நேற்று (சனிக்கிழமை) பிணையில் வெளிவந்த கொலைக் குற்றவாளி இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அரக்கோணம் ராஜாபாதர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(37). இவர் கடந்த செப்டம்பர் மாதம் அரக்கோணத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கார்த்திகேயன் நேற்று (சனிக்கிழமை) சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்து அரக்கோணம் கம்மவார் தெருவில் ஒரு வீட்டில், நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி படுகொலை செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். கோகுல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கார்த்திகேயன் ஏழாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா கால குற்றவாளிகள் விடுவிப்பு நடவடிக்கையின் கீழ் கார்த்திகேயன் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து கோகுல் கொலை சம்பந்தமாக பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்தகொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.