பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மன்னார்குடி, ருக்மணி பாளையத்தில் உள்ள தனியார் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோலியப் பொருள்களின் விலையையும், வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளையின் விலையையும் உயர்த்தி வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருகள்களின் விலை மிக கடுமையாக உயர்ந்து வருவது ஒரு புறம் என்றாலும், மறுபுறம் பொது முடக்கம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில், எரிவாயு உருளை விலை உயர்வு சாமானிய மக்களை பாதிப்படை செய்வதால் உடனடியாக , பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வையும், எரிவாயு உருளையன் விலை உயர்வையும் ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ருக்மணி பாளையத்தில் உள்ள தனியார் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை நிலையம் அருகே வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு , காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் நெடுவை ஜி.குணசேகரன் தலைமை வகித்தார்.
இதில்,மாநில நிர்வாகி டி.வடுகநாதன் ,மாவட்டச் செயலர்கள் ராமனுஜம் , ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.