கண்டலேறு அணையிலிருந்து தெலங்கு கங்கை கால்வாயில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் புதன்கிழமை தமிழகத்தை வந்தடைந்தது. இதனை பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து தெலங்கு கங்கை கால்வாயில் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் புதன்கிழமை தமிழகத்தை வந்தடைந்தது. பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்க தெலங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆந்திரத்தில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா ஆற்று நீரை ஆந்திர அரசு அளித்து வருகிறது.
தமிழகம்-ஆந்திரம் மாநிலங்களுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுக்கு 12 டி.எம்.சி தண்ணீர் தரப்பட வேண்டும். அந்த வகையில் தமிழக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், இரு முறை கடிதம் எழுதிய நிலையில், கண்டலேறு அணையில் இருந்து கடந்த 14-ஆம் தேதி வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அவை தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து சேர்ந்தது. அதனை பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கிருஷ்ணா நதி நீரை மலர் தூவி வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், ஆந்திரத்தில் இருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை முழுமையாக பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சென்னை குடிநீர் ஏரிகளான சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகளில் 6.6 டி.எம்.சி தண்ணீர் இருப்பும், இந்த பருவத்திற்கான 0.5 டி.எம்.சி தண்ணீரும் கிடைப்பதால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தெரிவித்தார்.