மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போலீஸ்காரர் லாரி மோதி உயிரிழந்தார்.
மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் கண்ணன்(33), இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணி செய்து வந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் பரமக்குடியிலிருந்து கீழப்பசலை கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
மானாமதுரை அருகே மேலப்பசலை என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கண்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக கண்ணன் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்துச் சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.