கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் வழியாக கேரளத்துக்கு வேலைக்கு செல்ல 3 பேருந்துகளில் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் புதன்கிழமை வந்தனர், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மேற்குவங்கம் மாநிலத்திலிருந்து, 3 பேருந்துகளில் ஆண், பெண் கூலித் தொழிலாளர்கள் சுமார் 180 பேர் கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்ய இடைத்தரகர்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
புதன்கிழமை காலையில் மூன்று பேருந்துகளும் கேரளத்துக்குள் செல்ல சோதனைச்சாவடியில் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டது.
அவர்களிடம் விசாரணை செய்த கம்பம்மெட்டு சோதனைச்சாவடி போலீசார், இ-பாஸ் அனுமதி, கரோனா தொற்று பரிசோதனை சான்றிதழ் பற்றிய விவரங்களைக் கேட்டனர். அதைக்கொண்டு வாருங்கள் அனுமதி தருகிறோம் என்று தெரிவித்தனர்.
அவர்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் திருப்ப அனுப்பப்பட்டனர்.
மூன்று பேருந்துகளும் கம்பம்மெட்டு கம்பம் மலை அடிவாரத்தில் நிறுத்தப்பட்டது. தகவல் கிடைத்ததும் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் கே.சிலைமணி மற்றும் போலீசார் அடிவாரப் பகுதிக்கு வந்தனர்.
மேற்கு வங்கம் மாநில கூலித் தொழிலாளர்களிடம் விசாரணை செய்து அவர்களை திருப்பி அனுப்ப ஏற்பாடுகளைச் செய்தனர்.
மேலும் இவர்களை கேரளத்துக்கு வேலைக்கு அழைத்துச் செல்லும் பல்லவராயன் பட்டியைச் சேர்ந்த இடைத்தரகரை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
ஏற்கனவே கடந்த ஜுன் 20 இல் மேற்கு வங்களத்திலிருந்து வந்த 67 ஆண், பெண் கூலித் தொழிலாளர்கள் திரும்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.