புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு புதன்கிழமை (ஜூன்23) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதற்காக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில் 2021-22ம் ஆண்டு பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2018 -ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை வெளியிட்ட விதிகளின்படி இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும்.
நிகழாண்டு கரோனா காரணமாக 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் 2019-20 இல் நடைபெற்ற 9 -ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்தாண்டு பிளஸ்-1 சேர்க்கை நடைபெறவுள்ளது.
இந்த சேர்க்கைக்காக அனைத்து கல்வி நிறுவனங்களும் 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை பின்பற்றி தான் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியலை தயார் செய்து சேர்க்கையை நடத்த வேண்டும். ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
விண்ணப்பங்களை பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
புதன்கிழமை (ஜூன் 23) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 5 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜூலை 12 -ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 14 -ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும்.
ஜூலை 19 -ஆம் தேதி காலியிட விவரம் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 21-ஆம் தேதி அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும்.
ஜூலை 22-ஆம் தேதி காலியிட விவரம் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடும். ஜூலை 23-ஆம் தேதி தனியார் பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என, கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு தகவல் தெரிவித்துள்ளார்.