திருநெல்வேலி: திருநெல்வேலியில் தாமிரவருணியில் தந்தை-மகன் திங்கள்கிழமை மூழ்கிய நிலையில் மகனின் உடல் மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியின் போது சடலமாக மீட்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (58). அங்குள்ள கோவிலில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது மகன் சங்கரசுப்பிரமணியன் (20). ஒரு கல்லூரியில் இளநிலை வணிகவியல் இரண்டாமாண்டு பயின்று வந்தார். சுவாமிநாதனின் உறவினர் இறந்ததையடுத்து விஷேச நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்தினருடன் திருநெல்வேலி சந்திப்புக்கு கடந்த 21 -ஆம் தேதி வந்தார்.
பின்னர் தனது மகனுடன் கைலாசபுரம் பகுதியில் தாமிரவருணி ஆற்றுக்கு குளிக்க சென்றிருந்தபோது தந்தை- மகன் இருவரும் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். 21-ஆம் தேதி மாலையில் சுவாமிநாதன் சடலமாக மீட்கப்பட்டார். சங்கரசுப்பிரமணியனை தேடும் பணி மூன்றாவது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்தது.
இந்நிலையில் வடக்கு புறவழிச்சாலை ஆற்றுப்பாலம் அருகே உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.