திருப்பூர்: கோவில்களைத் திறக்கக்கோரி திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களைத் திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலச் செயலாளர் ஜெ.எஸ்.கிஷோர்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை பக்தர்களின் வழிபாட்டுக்காக உடனடியாகத் திறக்க வேண்டும்.
மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்தும், சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்தவும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை, அவிநாசி, காங்கயம், வெள்ளக்கோவில், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசு, தனியார் கோவில்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார். இந்த ஆர்ப்பாட்டங்களில் இந்து முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.