தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
தம்மம்பட்டி உடையார்பாளையத்தில் வசிப்பவர் நாகராஜ் (53). பாத்திரம் வியாபாரம் செய்துவருகிறார். வெள்ளிக்கிழமை காலை, தனது இருசக்கர வாகனத்தில் மனைவி பிரேமா (45), கர்ப்பிணியான மருமகள் பேபி சாலினி ஆகியோருடன், ஆத்தூரில் இருந்து தம்மம்பட்டிக்கு வந்தார்.
அப்போது, நாகியம்பட்டி சோப்புமண்டி அருகே வந்தபோது, எதிரே காய்கறி ஏற்றி வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் மூன்று பேரும் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மூவரும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதில், பலத்த காயம் அடைந்த கர்ப்பிணி பேபி சாலினிக்கு, பிரசவ வார்டில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து, தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.