மானாமதுரை: ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை அதிகாலை மானாமதுரை வந்தடைந்தது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை பொறுத்தவரை ஏராளமான குடிநீர் திட்டங்கள் வைகை ஆற்றுக்குள் செயல்பட்டு வருகின்றன.
வறட்சி காரணமாக குடிநீர் திட்டங்களில் நாளுக்கு நாள் நீராதாரம் வெகு வேகமாக குறைந்து பல இடங்களில் குடிநீர் திட்டங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளது.
இதனால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் அலையும் அவல நிலை உள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம் பகுதிக்கு வந்தடைந்த வைகை தண்ணீர் அங்கிருந்து 28 கி.மீ பயணித்து சனிக்கிழமை அதிகாலை மானாமதுரை வந்தடைந்து. பின்னர் இங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது.
மானாமதுரை அருகே 5 கி.மீ தொலைவில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணையில் இந்த தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு அதன் பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு இந்த தண்ணீர் திறந்து விடப்படும்.
குடிநீர் தேவைக்காக வைகையில் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றை ஒட்டிய மானாமதுரை திருப்புவனம் இளையான்குடி பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த பகுதிகளில் செயல்படும் குடிநீர் திட்டங்களுக்கும் விவசாய பாசன கிணகளுக்கும் வைகை தண்ணீர் மூலம் நீர் ஆதாரம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.