கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை. அதிமுக தான் கெஞ்சுகிறது என்ற அக்கட்சியின் எல்.கே.சுதீஷ் பேச்சால் அதிமுக கூட்டணிக்குள் பரபரப்பு கிளம்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தேமுதிக உடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை ஆரணியில் நடைபெற்ற தேமுதிக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை. அதிமுக தான் கெஞ்சுகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் “ 2016ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் அக்கட்சியே இருந்திருக்காது. மாநிலங்களவை இடத்திற்காக நாம் ஆசைப்படவில்லை” என்ற அவரது பேச்சு அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை கிளப்பியுள்ளது.