தேர்தல் பிரசாரத்திற்காக தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர் கேரளத்திற்க்கு செல்லவுள்ளார்.
பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுவைக்கு வந்தார்.
அப்போது தி.மு.க.வையும், காங்கிரசையும் கடுமையாக தாக்கிப் பேசினார் பிரதமர் மோடி. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை மீண்டும் தமிழகம் மற்றும் புதுவைக்கு வருகை தருவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 10.15 மணிக்கு தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளம் மாநிலம் பாலக்காடு சென்றுள்ள மோடி, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிற்பகல் 12.40 மணிக்கு தாராபுரத்திற்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு 12.50 மணிக்கு வருகிறார். தொடர்ந்து அங்கு நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.
பின்பு கூட்டம் முடிந்ததும் அங்கு இருந்து கோவை செல்லும் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புதுவை சென்று மாலையில் அங்கு நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை, தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.