புதுதில்லி: மாநிலங்களுக்கு பேரிடர் செலவினங்களுக்கான கூடுதல் நிதியுதவி திட்டத்தை நடப்பு 2021-22 நிதியாண்டிற்கும் நீட்டித்து, ரூ.8,873 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. நாட்டில் கடந்த 24 நேரத்தில் புதிய உச்சமாக 4,01,993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 3,523 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில அரசுகளுக்கான பேரிடர் நிதிக்கான முதல் தவணையாக ரூ.8,873 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையின் பயன்பாட்டின் சான்றிதழுக்காக காத்திருக்காமல் இந்த தொகை முன்கூட்டியேவெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அளித்துள்ள பேரிடர் நிதியில் 50 சதவீதம் வரை கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, பேரிடர் நிதிக்கான முதல் தவணை ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டு வந்த நிலையில் கரோனா காலம் என்பதால் முன்கூட்டியே வழங்கப்படுகிறது.