கம்பம்: கேரளம் மாநிலத்தில் தொற்றுநோய் பரவல் அதிகமாக உள்ளதால் தேனி மாவட்டம் அருகில் உள்ள புகழ்பெற்ற சா்வதேச சுற்றுலாத்தலமானதேக்கடியில் சுற்றுலா பயணிகள் வர சுற்றுலா மேம்பாட்டுக்கழகம் தடை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள சுற்றுலா தலங்களை அரசு மூடி வருகிறது. இதற்கிடையில் தேக்கடியில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு சனிக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் வர தடைசெய்து கேரள மாநில சுற்றுலா கழகம் அறிவித்தது.
மேலும் தேக்கடி சார்ந்துள்ள ஏரியில் படகுசவாரி, யானை சவாரி, மலையேற்றம், உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது.
தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயம் தேசிய வன உயிரின சரணாலயம் கட்டுப்பாட்டில் உள்ளதால், இதனைத் தொடர்ந்து மேகமலை வன உயிரின சரணாலய பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேக்கடி குமுளி உள்ள தனியார் சுற்றுலா தலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் மறு அறிவிப்பு தரும் வரையில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படமட்டார்கள் என்று தனியார் சுற்றுலா உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
குமுளி பஞ்சாயத்து அலுவலகம் மூடல்: தேக்கடியில் உள்ள குமுளி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் 4 ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் தனிமை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக குமுளி கிராம பஞ்சாயத்து அலுவலகம் மூடப்பட்டது.
இதுபற்றி கிராம பஞ்சாயத்து செயலாளர் குமார் கூறுகையில், 4 பேர்களுக்கு தொற்று பரவி உள்ள நிலையில் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மற்ற ஊழியர்களுக்கு, சளி மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இணையதளம் மூலம் கிராம பஞ்சாயத்து சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.