ஆகஸ்ட்- டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்: வி.கே.பால் நம்பிக்கை

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தில் தடுப்பூசிகள் பற்றாக்குறையுடன் மாநிலங்கள் சிக்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் 216 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.
நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால்
நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால்


புதுதில்லி: கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தில் தடுப்பூசிகள் பற்றாக்குறையுடன் மாநிலங்கள் சிக்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் 216 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியும் அடுத்த வாரத்திற்குள் கிடைக்க வாய்ப்புள்ளதால் ஒட்டுமொத்த மக்களுக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார்.

நாட்டில் கரோனா இரண்டாவது அலை சுனாமி வேகத்தில் பரவி வருகிறது. நாள்தோறும் தொற்று பாதிப்போரின், உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களை தொற்று பாதிப்பில் இருந்து தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. 

ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி போதுமான அளவில் இல்லை என்பதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை கோவாக்சின், கோவிஷீல்ட் இரு தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தாலும் அவை மக்களுக்கு செலுத்தப்படவில்லை, சந்தையிலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசி கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு தில்லி, மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை கோர முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், சுகாதார அமைச்சகத்தின்  கூட்டத்திற்கு பின்னர் நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி என்பது முக்கியமானது. ஆனால், அதைத் தயாரிக்கவும், அவை மக்களுக்கு கிடைக்கவும் சிறிது காலம் ஆகும். அதனால்தான் நாங்கள் முதலில் கரோனா அதிகம் பாதிக்கபடக்கூடிய பிரிவினருக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசியை இலவசமாகச் செலுத்தினோம் என்றார். 

எவ்வாறாயினும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதுமான தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கும். அளவுகள் இருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் 216 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும். அப்போது அனைவருக்கும் கிடைக்கும். இந்த 216 கோடி தடுப்பூசியில் 75 கோடி கோவிஷீல்ட், 55 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் அடங்கும்.

மேலும் பயோலாஜிக்கல் -இ 30 கோடி தடுப்பூசி, கெடில்லா 5 கோடி தடுப்பூசி, சீரம் நிறுவனத்தின் நோவாக்ஸின் 20 கோடி தடுப்பூசி, பாரத் பயோடெக்கின் மூக்கில் செலுத்தும் தடுப்பூசி 10 கோடி, ஜென்னோவா 6 கோடி தடுப்பூசி, ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 15.6 கோடி ஆகிய தடுப்பூசிகளும் வந்துவிடும்.

மேலும் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன், மாடர்னா, பைஸர் ஆகிய நிறுவனங்களுடனும் மத்திய உயிர்தொழில்நுட்பம் மற்றும் வெளியுறவுத்துறை தடுப்பூசிகளை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் வந்து இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்கப் பேசி வருகிறோம்.

இதுவரை மத்திய அரசு 35.6 கோடி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்தவற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிஎம் கேர்ஸ் நிதி மூலம் 6.6 கோடி தடுப்பூசிகள் (5.6 கோடி கோவிஷீல்ட் மற்றும் 1 கோடி கோவாக்சின்) வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டத்தின் கீழ், 12 கோடி தடுப்பூசிகள்(10 கோடி கோவிஷீல்ட் மற்றும் 2 கோடி கோவாக்சின்) வாங்கப்பட்டு வருகின்றன, இவற்றில், 86 சதவீத பெறப்பட்டுள்ளன, மீதமுள்ளவை இந்த மாத இறுதிக்குள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாம் கட்டத்தின் கீழ், பிஎம் கேர்ஸ் நிதி மூலம் 16 கோடி தடுப்பூசிகள் (11 கோடி கோவிஷீல்ட் மற்றும் 5 கோடி கோவாக்சின்) வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளன என்று பால் கூறினார். 

மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தடுப்பூசிகளை வாங்க கட்டாயப்படுத்தும் கொள்கையை எதிர்க்கின்றன. அனைவருக்கும் இலவச தடுப்பூசிகள் வேண்டும் என முதல்வர்கள் கோருகின்றனர்.

உலக சுகாதாரத்துறை மையம், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யலாம். அவர்கள் இரண்டு நாள்களில் இறக்குமதி உரிமத்தைப் பெறலாம். அவற்றை யார் தடுக்கிறார்கள்? என்று பால் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com