கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
ஓசூர் அபாலா மனநல காப்பகத்தில் உள்ள பெண்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கான கருப்பு பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்து முடிவு தெரிவிப்பதில் காலதாமதம் ஆவதால் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் யாரும் சிகிச்சையில் இல்லை. அதற்கு தேவையான மருந்துகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைவாகவே உள்ளது. அரசிடம் கேட்டுள்ளோம். 12 நாள்களில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். அது கிடைத்தவுடன் அவர்களுக்கு அளிக்கப்படும் எனக் கூறினார்.
இந்த சிறப்பு முகாமில் ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எ,ஸ்.ஏ.சத்யா, வட்டார மருத்துவ அலுவலர் விவேக் அபாலா மனநல காப்பகத்தின் நிர்வாக இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.