சேலம்: சேலத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை முரண்பாடு குறித்து தனியார் ஆய்வகங்களில் ஆய்வு செய்ய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு 125 ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் 40 ஆக்சிஜன் செறியூட்டி இயந்திரங்களை தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
மேலும் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது :
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே முதல்வர் கரோனா நோய் தடுப்பு பணிகளை சிறப்பாக கையாண்டு வருகிறார். இருந்தபோதும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி குறை கூறுகிறார். மேலும் அவர் அரசியல் செய்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், கரோனா காலத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
மேலும் சேலம் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் சூழலில் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மாதிரிகள் விட தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் சதவீதம் அதிகமாக உள்ளதால் முரண்பாடுகள் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தனியார் ஆய்வகங்களில் ஆய்வு செய்யப்படும் என கூறினார்.
அதேபோல் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் தயாரிப்பதற்கான பிளானட் ஓரிரு நாள்களில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கரோனா பெருந்நோய் தொற்று காலத்தில் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் சீல் வைப்பு அபராதம் நடவடிக்கையோடு நிச்சயம் கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்திருப்பதாகவும் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மது பாட்டில்கள் எந்த கடையில் இருந்து பெறப்பட்டது என விசாரணை நடைபெற்று கடையில் சேல்ஸ் மேன்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.