நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை தமிழக சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ வீ.மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அமைச்சர் சிவ வீ.மெய்யநாதன் நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாகைக்கு வருகை தந்த அவர், நாகை இ.ஜி. எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில், இந்திய மருத்துவம் ஓமியோபதி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். அப்போது, அந்த மையத்தில் தங்கி சிகிச்சை பெறும் கரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் உணவு முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ச்சியாக, நாகை நகராட்சிக்குள்பட்ட டாடா நகர் சமுதாயக் கூடத்தில் கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சிவ வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
மீனவரின் குடும்பத்துக்கு ஆறுதல்: கேரள மாநில அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடல் சீற்றத்தில் சிக்கி மாயமான நாகை டாடா நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த க. பிரவீன்குமார்(30) என்பவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, நாகை சட்டப் பேரவைத் தொகுதி ஜெ. முகமது ஷா நவாஸ், திமுக நாகை மாவட்டப் பொறுப்பாளர் என்.கெüதமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.