கருணாநிதி பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை அமைதியாக, எளிமையாகக் கொண்டாடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

 
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை அமைதியாக, எளிமையாகக் கொண்டாடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஜூன் 3 -ஆம் தேதி நம் தாய்மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த கருணாநிதியின் பிறந்தநாள். திமுகவினருக்கு அது சிறந்த நாள். நவீனத் தமிழ்நாட்டின் நன்மை பயக்கும் உயர்வுக்கெல்லாம் காரணமான நம் உயிர்நிகர் தலைவர் அவர்களை, அய்யா முத்துவேலரின் வாழ்விணையரான அன்னை அஞ்சுகம் அம்மையார் ஈன்ற நாள்.

ஆறாவது முறையாக திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் இன்றைய நிலையில், உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்  மகிழ்ச்சியை, மனநிறைவை உங்களில் ஒருவனான நான் நன்கறிவேன். 

அவரது பெயருக்கும், புகழுக்கும் அணிச் சேர்க்கும் வகையில், இந்தப் பேரிடர் காலத்தில் இணையிலாப் பணியாற்றி, மக்கள் நலன் போற்றிக் காத்திட வேண்டும் என்ற உறுதியுடன் ஒவ்வொரு நாளும் ஊழியம் செய்து வருகின்றேன். நமது அமைச்சர் பெருமக்களும், கட்சியின் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும்  உறுதுணையாக நிற்கின்றனர். தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், செயல் வீரர்கள், அனைவரும் மக்கள் நலன் காக்கும் பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு அரும்பணியாற்றுகின்றனர்.

கரோனா கால ஊரடங்கு காரணமாக, கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3- ஆம் நாள் கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் ஒத்தி வைத்திருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி. அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாகும். கருணாநிதி இன்று ஆட்சிப்பொறுப்பில் இருந்திருந்தால், இதைத்தான் நம்மிடம் எதிர்பார்த்து அறிவுறுத்தியிருப்பார்.

ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம். கட்சியை நிறுவிய பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய முத்தான மூன்று அன்புக் கட்டளைகள், ‘கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு’ ஆகியவையாகும். இந்த மூன்றில் மிக முக்கியமானது, ‘கட்டுப்பாடு’ என்பதைத் தலைவர் கருணாநிதி பல முறை நமக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

பிறந்தநாளில் கட்டுப்பாடு காத்து, அவரவர் இல்லங்களில் கருணாநிதி திருஉருவப் படத்திற்கு மரியாதை செலுத்திக் கொண்டாடுங்கள். அவர் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஊரடங்கில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை எதிர்பார்த்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று உதவிகளை வழங்கிடுங்கள்.

நலன் காக்கும் உதவிகளைச்  செய்வதற்கேற்ப, அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, முகக் கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கரோனா  பேரிடர் கால நெறிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடித்து, எவ்வகையிலும் கூட்டம் சேர்ந்திடாதவாறு கவனமாகச் செயலாற்றுங்கள். பேரிடர் கால நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, அமைதியாக, எளிமையாகக் கொண்டாடுவோம்.

மக்கள் நலன் காத்து பேரிடரை  வெல்வோம். அடுத்து வரும் ஆண்டுகளில், பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற அவரது அருமைத் தம்பியாம் கருணாநிதி பிறந்தநாளைப் பெருமகிழ்ச்சியுடன் விழா எடுத்துக் கொண்டாடுவோம். என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com