சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை கோடம்பாக்கம் பகுதிகளை எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை விருகம்பாக்கம் பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பாஜக நிவாரண உதவி:
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அடையாறு மல்லிகைப் பூ நகரில் ஆற்றங்கரை ஓரமாக வசித்து வரும் பொது மக்களுக்கு பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நளினிஸ்ரீ, வேளச்சேரி பாஜக கிழக்கு மண்டலத் தலைவர் வெங்கடேஷ், முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன், பாஜக செய்தி மற்றும் ஊடக பிரிவு மாநில தலைவர் திருப்பதி நாராயணன் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர்.