நிதிஆயோக் தரவுகளின்படி இந்தியாவில் வறுமையில் உள்ள மாநிலங்களின் பட்டியலில் பிகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் முன்னணியில் உள்ளது தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் நிதி ஆயோக் எம்பிஐ எனப்படும் பலபரிணாம வறுமை குறியீடு தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் மக்கள்தொகைக்கேற்ப நிலவும் வறுமை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டில் வறுமையான மாநிலங்களின் பட்டியலில் பிகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
பிகாரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 51.91 சதவிகிதத்தினர் வறுமையில் உள்ளதாகவும், அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 42.16 சதவிகிதத்தினரும், உத்தரப்பிரதேசத்தில் 37.79 சதவிகிதத்தினரும் வறுமையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் இந்தப் பட்டியலில் கேரளம்(0.71%), கோவா (3.76%), சிக்கிம் (3.82%) மற்றும் தமிழ்நாடு (4.89%) உள்ளிட்ட மாநிலங்கள் இறுதி நான்கு இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 746 பேருக்கு கரோனா தொற்று
சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம், ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்குழந்தைகள் இறப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப்படிப்பு மற்றும் வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட 12 தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.