திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஐந்து மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருத்தணி முருகன் கோயில் மற்றும் அதன் இருபத்தி ஒன்பது உப கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு கோயில் நிர்வாகம் ஒப்பந்தம் அடிப்படையில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நியமித்து மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்கள் திருத்தணி முருகன் மலைக்கோயில் தேவஸ்தான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்காததால் இன்று வியாழக்கிழமை (அக்.7) 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மலைப்பாதை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி.
அப்போது எங்களுக்கு 5 மாதம் சம்பளம் கிடைக்காததால் குடும்பம் வறுமையில் உள்ளது. பலமுறை சம்பளம் வழங்கக்கோரி கோயில் நிர்வாகத்தினரிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் கூறினர்.
தகவல் அறிந்ததும் திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தூய்மைப் பணியாளர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.