தை மாதத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில் குடமுழுக்கு?
திருச்சி உறையூரிலுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலில் வரும் தை மாதத்தில் குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டு முழுவீச்சில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கோயில் திருப்பணிகள் முழுவதும் நன்கொடையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
கோயிலில் கருவறை அம்மன் முன்னுள்ள அர்த்த மண்டபத்திற்கான ராஜநிலை வைக்கும் பணி, சிறப்பு பூஜைகளுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருவறைப் பகுதி திருப்பணிகள் காரணமாகக் கடந்த சில வாரங்களாக, பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் நிறுத்தப்பட்டு, உற்சவ அம்மன் தரிசனம் நடைபெற்றுவருகிறது.
1993-ல் இந்தக் கோயில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, இதற்கு முன்னர், 2006், மார்ச் 17 ஆம் நாள் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக் குடமுழுக்கின்போது, ராஜகோபுரம், அம்பாள் மேற்கு மண்டபம், கிழக்கு மண்டபத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மீண்டும் குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன், திருப்பணிகள் தொடங்கப்பட்டு முனைப்பாக நடைபெற்று வருகின்றன.
திருப்பணிகளில் ஒன்றாக கருவறை முன்னுள்ள அர்த்த மண்டபத்தைக் கருங்கல்லில் அமைக்கத் திட்டமிடப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜையுடன் ராஜநிலை வைக்கப்பட்டது. கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக மிகக் குறைவானவர்களே அனுமதிக்கப்பட்டனர்.
இந்தக் குடமுழுக்கையொட்டி, கோயிலின் மேற்கு, வடக்கு, தெற்கு பிரகாரங்களில் சாலகோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
அம்மன் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் பிற பகுதிகள் அனைத்தும் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டுக் குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன்
முனைப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணிகள் நிறைவுறுவதைப் பொருத்து, தை மாதத்தில் கோயில் குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்படுவதாகவும் ஒருவேளை தாமதமானால் வைகாசியில் குடமுழுக்கு நடைபெறும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.