உக்ரைன் மீதான ரஷியாவின் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், நேட்டோ - ரஷியா இடையிலான பிரச்னைக்கு அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்தியா ரஷியா உயர் அதிகாரிகள் மட்டத்தில் போர் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், உக்ரைனிலுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் கடந்த சில தினங்களாக இருநாட்டின் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டை எழுப்பியது.
இந்நிலையில், இன்று காலை போர்த்தொடுக்க அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரஷியப் படைகள் கிழக்கு உக்ரைன் வழியாக அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கிவ்விற்குள் நுழைந்துள்ள ரஷியப் படைகள் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.
அவசர நடவடிக்கையாக கிவ்வில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அந்தந்தப் பகுதிகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டைக் காக்க முன்வரும் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ரஷியப் படைகள் முன்னேறி வருவதால், உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.