
எம்.ஏ.சுசீலா
மதுரையிலுள்ள பாத்திமாக் கல்லூரியில் 36 ஆண்டுக் காலம் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் இடையில் இரு ஆண்டுகள் துணை முதல்வராகவும் பணியாற்றியவர். சிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு என்னும் இருதளங்களிலும் இயங்கி வருபவர். இவரது முதல் சிறுகதையான ’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம், 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டியில் முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து 80 க்கும் மேற்பட்ட இவரதுசிறுகதைகளும், கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரது சில கதைகள், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஃப்ரெஞ்சு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
'கண் திறந்திட வேண்டும்' என்னும் இவரதுசிறுகதை, பாலுமகேந்திராவின் 'கதை நேரம்' தொலைக்காட்சித்தொடர் வழி, 'நான் படிக்கனும்' என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது.
நான்கு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரை நூல்கள் இவற்றோடு பணி நிறைவு பெற்றபின் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'குற்றமும்தண்டனையும்' -(2007) 'இடியட்' - அசடன் (2011) ஆகிய உலகப் பேரிலக்கியங்கள் இரண்டையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவரது மொழிபெயர்ப்பில் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மூன்று குறுங்கதைகள் 'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்' என்ற பெயரில் நற்றிணை வெளியீடாக வந்துள்ளன.
இவரது முதல் நாவல் 'யாதுமாகி' 2014 இல் வம்சி வெளியீடாக வந்திருக்கிறது. 'அசடன்' நாவலின் மொழிபெயர்ப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி - திசை எட்டும் மொழியாக்க விருது, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி யூ போப் விருது ஆகிய மூன்று விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
2008 முதல் www.masusila.com என்ற பெயரில் வலைத்தளம் தொடங்கி எழுதி வருகிறார்.
ரஷ்ய இலக்கியங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவருக்கு ரஷ்ய இலக்கிய மேதைகள் வாழ்ந்து மறைந்த அந்த சோஷலிச மண்ணுக்கு ஒருமுறையேனும் சென்று மீள வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. அவர் ரசித்து வாசித்த இலக்கிய ஆளுமைகளின் நினைவுகள் ஊடறுக்க அவர் ரஷ்ய சென்று திரும்பிய நாட்களை தினமணி வாசகர்களுக்காக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஒவ்வொருவாரமும் புதன்கிழமை அன்று இவரது ரஷ்யப்பயணத் தொடர் வெளிவர இருக்கிறது.