தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்...
By கார்த்திகா வாசுதேவன் | Published on : 19th November 2019 04:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

Letters from Nehru to his daughter Indira priyadharhsini
இது ஒரு புத்தகத்தின் தலைப்பு. புத்தகம் என்றால் இது கதைப் புத்தகமோ அல்லது கட்டுரைத் தொகுப்போ அல்ல. மொத்தம் 30 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு. எழுதியவர் பண்டித நேரு, யாருக்கு எழுதினார் என்றால்? தன் 10 வயது மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு. ஏன் எழுதினார் என்றால்? நேரு அப்போது தன் மகளுக்கு அருகில் இருக்க முடியாத சூழல். ஒரு தந்தையாக.. தன் மகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்ற வருத்தம் நேருவுக்குள்ளும் இருந்திருக்குமாயிருக்கும். அந்த தவிப்பைப் போக்கிக் கொள்ளவே மகளுக்கு கடிதம் எழுதினார் அந்த மகானுபாவர். நேருவுக்கு தீவிரமான வாசிப்புப் பழக்கம் இருந்தது.. அதில் தனக்கு கிடைத்த இன்பங்களை அப்படியே தன் மகளுக்குக் கடத்தும் ஆர்வமும் அவருக்குள் அளவற்று இருந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவலாம்.
அப்போது நேரு அகமதாபாத்திலும், இந்திரா முசெளரியிலும் இருந்தனர். முசெளரியில் படித்துக் கொண்டிருந்த மகளுக்கு நேரு இந்தக் கடிதங்களில் அப்படி என்ன எழுதி அனுப்பினார்?
இந்த பூமிக்குக் கீழே உள்ள அத்தனை விஷயங்களைப் பற்றியும் வரலாற்றுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் நேரு கடிதங்களாக எழுதினார். இயற்கை வரலாறு, உலக நாகரீகங்களின் தோற்றம் எனப்பல விஷயங்கள் அதில் இடம்பெற்றன. உதாரணமாக நேரு குழந்தைகளின் உளவியலை நன்கு அறிந்தவராக இருந்தார் என்பதால், தன் மகளுக்கு எழுதுவதைப்போல அவர் உலகக் குழந்தைகள் அனைவரது ஆர்வத்தையும் தூண்டக்கூடிய விதத்தில் அந்தக் கடிதங்களை எழுதியிருந்தார்.
கடிதத்தின் முதல் வரியை இப்படி ஆரம்பித்திருந்தார்..
மகளே, நானும், நீயும் சேர்ந்திருக்கும் போது, நீ என்னருகில் அமர்ந்துகொண்டு என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பாய், நானும் அவை அனைத்திற்கும் பதில் சொல்ல முயற்சித்துக் கொண்டிருப்பேன். ஆனால், இப்போது நீ முசெளரியில் இருக்கிறாய். நானோ அலகாபாத்தில்... இப்போது நம்மால் அருகமர்ந்து பேசிக்கொள்ள முடியாது. அதனால் தான் நான் உனக்கு அடிக்கடி கடிதம் எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.
அப்படி நான் எழுதப்போகும் கடிதங்களில் நமது பூமியின் கதை, இந்தப் பரந்த பூமியில் சிறியதும், பெரியதுமாகப் பரவி இருக்கும் எண்ணற்ற தேசங்களின் கதைகள், அந்த தேசங்கள் அனைத்தும் ஒன்றிலிருந்து மற்றொன்று எவ்விதமாக வேறுபடுகின்றன போன்ற கதைகளை எல்லாம் சுருக்கமாக விவரித்து எழுதலாம் என்றிருக்கிறேன்.
- என நேரு தன் கடிதத்தைத் தொடங்குகிறார்.

இது கூட ஒரு 10 வயதுக் குழந்தையை வாசிப்பை நேசிக்கும் வண்ணம் தூண்டும் ஒரு உத்தி தான். இப்படி தன் மகளுக்கு இந்த உலகையே ஒரு புத்தகத்துக்குள் அடக்கித் தர முயற்சிக்கிறார் நேரு.
நேரு தன் மகளுக்கு எழுதிய இந்தப் புத்தகத்தை நாமும் நம் குழந்தைகளுக்கு வாங்கித் தந்து வாசிக்கச் செய்யலாம்.
குறைந்த பட்சம் நேரு மாதிரி நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இம்மாதிரியாக அறிவுப்பூர்வமான விஷயங்களைப் பற்றி விவரித்து கடிதம் எழுதி அனுப்பினாலும் கூட சரிதான்.
நூல்: தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்
ஆசிரியர்: பண்டித ஜவஹர்லால் நேரு
வெளியீடு:
விலை: ரூ.128