வயது ஏற ஏற முகத்தில் சுருக்கம் ஏற்படுவது இயற்கை. ஆனால், நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், முக சுருக்கத்தை சில வருடங்களுக்குத் தள்ளிப்போடலாம். அதேபோன்று, சில பயிற்சிகளினாலும் சுருக்கத்தை நீக்கலாம். அடிக்கடி கோபம் கொள்பவர்களுக்கு விரைவிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி நெற்றியைச் சுருக்கும் பழக்கமுள்ளவர்களுக்கும் முகத்தில் சுருக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
முகச் சுருக்கம் மறைய இதோ சில டிப்ஸ்
இளமையிலேயே முதுமைத் தோற்றத்துடன் இருப்பவர்கள், தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களைச் சாப்பிட வேண்டும்.
தக்காளி பழச்சாறு, நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.
தரமான சந்தனப்பவுடருடன் கிளிசரின் சேர்த்து, பேஸ்ட் போன்று நன்கு குழைத்து, அதை முகத்தில் நன்கு பூசி, சிறிது நேரத்திற்குப் பின் கழுவிவிட வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வர, முக சுருக்கம் நீங்கும்.
காரட் சாறுடன் சிறிதளவு கடலை மாவு கலந்து, பேஸ்ட் போல செய்து அதை முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப் பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில் முக சுருக்கம் நீங்கும்.
வறண்ட சருமம் உடையவர்கள் வெறும் காரட் சாற்றினை மட்டும் முகத்தில் தேய்த்துவர, முக சுருக்கம் மறையும்.
காரட் சாறுடன் தேன் கலந்து அதனை முகத்தில் பூசி, சிறிது நேரத்திற்குப் பின், மென்மையான ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்துவந்தால், முக சுருக்கம் மறையும்.
தயிருடன் கடலை மாவைக் கலந்து , பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், முக சுருக்கம் மறையும்.
சாத்துக்குடிச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி கலந்து முகத்தில் பூசி, 30 நிமிடம் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவவும். இதுபோன்று 10 நாள்கள் செய்து வந்தால், முக சுருக்கம் மறையும்.
( நீங்களும் அழுகு ராணி ஆகலாம் நூலிலிருந்து)