குளிர்காலம் வந்துவிட்டதால் பெரும்பாலான பெண்களுக்கு சருமப் பிரச்னைகளும் ஆரம்பித்திருக்கும். குளிர்காலத்தில் சுற்றுப்புறச்சூழல் காரணமாகவும் தண்ணீர் உடலில் குறைவாக சேர்வதாலும் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனால் சருமம் வறண்டு போகிறது.
சருமம் வறண்டு போதலைத் தடுக்கவும், சருமம் மென்மையாக பொலிவாக இருக்க ஒரு இயற்கையான பேஸ் பேக் குறித்துப் பார்க்கலாம்.
வாழைப்பழம் - தயிர் பேஸ் பேக்
நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தின் சிறு பகுதியை எடுத்து பிசைந்து கொள்ளுங்கள் அல்லது மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கவும். அதன்பின்னர் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். மூன்றையும் நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.
முகத்தை ஒருமுறை கழுவிவிட்டு இப்போது இந்த பேக்கை அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் அல்லது முற்றிலும் காயும் வரை உலரவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீர் கொண்டு அலசவும். சருமம் பளபளப்பாக வாரம் ஒரு முறை செய்து வந்தாலே போதுமானது. ஒரு சில வாரங்களிலேயே மாற்றத்தை உணரலாம்.
வாழைப்பழம் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி சரும அடைப்புகளை சீராக்குகிறது. அதுபோல தேனும் தயிரும் சருமத்திற்கு வழவழப்பைத் தருவதுடன் கருமை நிறம், பருக்கள் ஆகியவற்றை நீக்குகிறது.