முகப்பரு பிரச்னைக்கு பல தீர்வுகள் உள்ள நிலையில் எளிமையான இயற்கையான ஒரு தீர்வுதான் வேம்பு.
முன்னொரு காலத்தில் கோடைக் காலங்களில் தண்ணீரில் வேப்பிலை போட்டு குளிக்கும் பழக்கம் உண்டு. உடலுக்கு குளிர்ச்சி மட்டுமில்லாது தோலில் உள்ள நச்சுகள், கிருமிகளைப் போக்க இவ்வாறு செய்வர்.
இந்த வேம்பு முகத்தில் உள்ள முகப்பருக்களை, வடுக்களைக் கூட நீக்கக்கூடியது. முகப்பரு உள்ளவர்கள் ஒரு 10 வேப்பிலையை எடுத்து நன்றாகக் கழுவி பின்னர் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டை முகத்தில் பேக் போடவும். இத்துடன் சிறிது மஞ்சள்தூளையும் சேர்த்துப் போடலாம்.
சருமத்தில் அழற்சி உள்ளவர்கள்கூட உங்கள் சருமத்திற்கு ஏற்றுக்கொண்டால் இவ்வாறு செய்யலாம். தோல் அழற்சியை சரிசெய்யும் தன்மை இயற்கையாகவே வேப்பிலைக்கு இருப்பதால் அனைவரும் இதனைப் பயன்படுத்தலாம்.
ஒருவேளை வேப்பிலை பேக் ஒப்புக்கொள்ளாதவர்கள் சருமத்திற்கு வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் இதனைப் பயன்படுத்தும் பட்சத்தில் சருமத்திற்கு நீரேற்றம் கிடைத்து சருமம் பொலிவாகும்.
மேலும், வேப்பிலை தோல் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. முகத்தில் சருமத்தின் தன்மையை ஒரேமாதிரியாக மாற்றுகிறது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகளை போக்கும் தன்மை வேப்பிலைக்கு உள்ளது.