தேவையானவை:
முழுப்பூண்டு - 2 (தோலுரிக்கவும்),
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தண்ணீர் - அரை லிட்டர்
மைதா - ஒரு தேக்கரண்டி
பால் - ஒரு கிண்ணம்
கிரீம் அல்லது கெட்டித் தயிர் - சிறிதளவு
ஆலிவ் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மைதாவையும் சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டி இல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, கிரீம் (அ) தயிர் சேர்த்துப் பரிமாறவும். பூண்டு சூப் ரெடி.
தேவையானவை:
ப்ராக்கோலி - ஒரு கிண்ணம்
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கிண்ணம்
வெண்ணெய், மைதா - தலா 1 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்)
பிரிஞ்சி இலை - சிறிதளவு
கிரீம் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் வெண்ணெய்யைச் சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் பிரிஞ்சி இலை சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மைதா சேர்த்து வறுக்கவும். பச்சை வாசனைப் போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு ப்ராக்கோலி சேர்த்து வேகவிடவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும். வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி... கிரீம், துருவிய சீஸ், கொத்துமல்லி சேர்த்து பரிமாறவும். ப்ராக் கோலி சூப் தயார்.