• எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து, பொடித்து அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சூப் கெட்டியாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
• மல்லியை ( தனியா) சிறிதளவு நெய்விட்டு வறுத்துப் பொடி செய்து, சாம்பார் செய்துமுடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடி வைத்தால் சாம்பார் கமகமவென மணத்துடன் இருக்கும்.
• சேமியா பாயசம் செய்யும்போது சேமியா வெந்து ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்க சேமியா வெந்ததும் சர்க்கரை, பால் சேர்ப்பதற்கு முன் ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைச் சேர்க்க வேண்டும். குழைந்திருந்தாலும் தனித்தனியாக பிரிந்துவிடும்.
• பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள் பாகற்காயின் கசப்பு தெரியாது. ருசியும் கூடும்.
• சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம் பழம் உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தால் சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
• வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப்போட்டு கிண்டிவிட்டால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
• உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது, மேலாக சிறிது ரொட்டித் தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
- சி.ஆர்.ஹரிஹரன், கேரளா.