பாக்கெட் மற்றும் துரித உணவுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான உப்பு மற்றும் கொழுப்பு கலந்திருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
ஜங்க் உணவுகள் என்று அழைக்கப்படும் 33 வகையான உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் உப்பு, கொழுப்பு உள்ளிட்டப் பொருட்களின் அளவை பரிசோதனை செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களின் கடைகள் மற்றும் விற்பனைக் கூடங்களில் இருந்து, 14 வகையான சிப்ஸ், உப்பிட்ட நொறுக்குத்தீணிகள், உடனடியாக செய்யும் நூடுல்ஸ், துரித கதியில் சமைக்கும் சூப், 19 வகையான பர்கர், வறுத்த உணவுகள், சிக்கன், பீட்ஸா, சான்ட்விட்ச், ரேப்பர் செய்யப்பட்ட உணவுகள் என பல வகையான உணவுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த உணவுப் பொருட்கள் அனைத்திலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமான அளவில் உப்பு மற்றும் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பாக்கெட் உணவுகளை உண்பதால், ஒரு மனிதன் தனது உடலுக்குத் தேவையான அளவை விட அதிகமான உப்பு மற்றும் கொழுப்பை நாள்தோறும் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.