விடுமுறை அல்லது பண்டிகை காலங்கள் என்றால் நாம் வழக்கத்தினை விட சற்று அதிகமாகவே சாப்பிடுவோம். அப்படி இருக்கும்போது, டயட்டில் இருப்பவர்கள் அந்த நேரத்தில் தனிமையை உணர வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஏனென்றால் பண்டிகை நாட்களில் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிடும்போது டயட்டில் இருப்பவர்கள் அதிகம் பகிர்ந்து சாப்பிட முடியாத காரணத்தால் அவர்கள் தனிமையை உணர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமுறை செய்யப்பட்ட ஆய்வுகள், பல சோதனைகள், சமூக உளவியல் கண்டுபிடிப்புகள், உணவு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல கருவிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, ஒரு பரிசோதனையில், இதுவரை எந்தவித கட்டுப்பாடும் இன்றி உண்பவர்களை முதல்முறையாக டயட்டில் ஈடுபடுத்தும்போது அவர்கள் அதிக தனிமையை உணர்ந்தார்கள் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கர்னெல் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கைட்லின் வூலி கூறும்போது, யூதர்களின் பஸ்கா பண்டிகையில் பார்வையாளர்களின் ஆய்வில் இருந்து பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. உணவுகளைப் பகிர முடியாததால் சிலர் கூட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் மத்தியில் எப்போதும் ஒரு வலுவான பிணைப்பு இருந்ததை காண முடிந்தது.
உணவு மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் குறித்து மற்றவர்கள் அறிவுரை கூறும்போது, டயட்டில் இருப்பவர்கள் வருத்தப்படுகிறார்கள். அதிலும், திருமணமாகாத அல்லது குறைந்த வருமானம் உடையவர்கள்தான் அதிகம் தனிமையை உணர்ந்துள்ளனர்' என்று தெரிவித்தார்.
ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களில் 30 சதவீதம் பேர் வரை டயட்டில் இருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.