சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள போரூர் அடுத்துள்ள முகலிவாக்கத்தில் ரோபோக்களைக் கொண்டு சர்வ் செய்யப்படும் புதிய ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டுள்ளது. நீலம் மற்றும் வெள்ளை நிறத்துடன் கூடிய 7 ரோபோக்கள் இங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சர்வராக இயங்கும் இவ்வகை ரோபோக்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வாடிக்கையாளர்களுடன் உரையாடும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் கூடுதல் சிறப்பாக, வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக அந்த ரெஸ்டாரண்டின் வரவேற்பறையில் ஒரு பெண் ரோபோ உள்ளது.
இந்த ஒவ்வொரு ரோபோவும் சுமார் ரூ.5 லட்சம் விலை கொண்டதாகும். மேலும் இந்த ரெஸ்டாரண்டில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ரோபோக்களை இயக்க பிரத்தியேக பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெஸ்டாரண்டின் பொது மேலாளர் கைலாஷ் கூறுகையில், இந்தியாவில் எங்களுக்கு 3 கிளைகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே வேறு எங்கும் ரோபோக்களை கொண்டு இயங்கும் ரெஸ்டாரண்டுகள் கிடையாது. எனவே இதை நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம். இவை அனைத்தும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோக்களுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அவற்றுக்கு சிறந்த பெயர்களை பரிந்துரைக்குமாறு எங்கள் வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பெங்களூருவில் விரைவில் மற்றொரு கிளையை திறக்கவும் முடிவெடுத்துள்ளோம். மேலும் ஒவ்வொரு டெபிளிலும் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்ப உணவை தேர்வு செய்ய டேப்ளட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.