போளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.
கொதிக்கும் பாலை உடனே உறை ஊற்ற வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப் போட்டு மோர் ஊற்ற வேண்டும்.
தீய்ந்தப் பாலில் சூடு ஆறும் முன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.
கேக் அல்லது பிஸ்கட் செய்து முடித்தபின் ஓவன் சூடாகவே இருக்கும். பழைய பிஸ்கட், முறுக்கு போன்றவற்றை உள்ளே வைத்தால் புதிது போன்று மொரமொரப்பாக இருக்கும்.
ரசத்திற்கு தாளிக்கும் பொழுது சிறிது நெய்யில் கடுகுடன் நான்கைந்து முழு மிளகையும் சேர்த்துத் தாளித்தால் ரசம் மணக்கும்.
மகிழம்பூ அச்சில் முறுக்கு செய்யும் போது தேங்காய்ப் பாலில் சிறிது சர்க்கரையைக் கலந்து பிசைந்தால் முறுக்கு அதிகச் சுவையுடன் இருக்கும்.
புட்டு மிருதுவாக இருக்க மூன்றில் ஒருபாகம் புழுங்கல் அரிசியையும், இரண்டு பாகம் பச்சை அரிசியையும் மாவாக்கி தயார் செய்ய வேண்டும்.
உளுந்து வடை மாவு நெகிழ்ந்து விட்டால் ஒரு பிடி மெது அவலைக் கலந்து தட்டினால் தட்ட இலகுவாகவும் வடையின் மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும்.
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது, பச்சரிசியை ஊற வைத்து அதனுடன் ஒரு மூடி தேங்காய்த் துருவல், ஒரு கரண்டி பழைய சாதம் முதலியவற்றையும் போட்டு அரைத்தால் ஆப்பம் வாசனையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு இவற்றை வதக்கும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்கினால் பொரியல் கொழகொழவென்று சேராமல் சிவந்து மொறு மொறுவென்று இருக்கும்; எண்ணெய்யும் அதிகம் தேவைப்படாது.
தேங்காய்ச் சட்னி தயார் செய்யும் போது புளி சேர்ப்பதற்கு பதிலாக எலுமிச்சம் சாறை பிழிந்து விடுங்கள். சட்னி சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.
குழம்பு, பொரியல் செய்வதற்கு தக்காளியை நறுக்கும்போது மிகவும் பொடியாக நறுக்கி சமைத்தால் விரைவில் வெந்துவிடும்.