கம்போடியா அங்கோர் தமிழ் சங்கமும் கம்போடியா அரசின் கலை, கலாசார அமைப்பும் இணைந்து நடத்தும் உலக தமிழ் கவிஞர்கள் மாநாடு இம்மாதம் 21 மற்றும் 22-ம் தேதிகளில் கம்போடியா சியம்ரீப் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை, இந்தியா மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்பட 40 நாடுகளில் இருந்து 500 தமிழ் கவிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக கம்போடியா நாட்டின் துணை பிரதமர், சியம்ரீப் மாநில கவர்னர் மற்றும் பாடலாசிரியர்களான பா.விஜய், விவேகா, ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இம்மாநாட்டில் கம்போடியா கலாசார அமைப்பினால் இலக்கியத்திற்கான உயர் விருது வழங்கப்பட்டு, கவிஞரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் கெளரவிக்கப்படவுள்ளார். ஈழத்துக் கவிஞரான இவரைப் பற்றி, நம் இணையதளத்தில் ஏற்கனவே செய்திகள் பதிந்து, அறிமுகமானவர்தான்.
இரண்டு தசாப்த காலத்துக்கும் மேலாக கலை, இலக்கிய, ஊடகத் துறையில் தடம் பதித்து வரும் பொத்துவில் அஸ்மின். இலங்கை அரசினால் அண்மையில் இலக்கிய துறைக்கான 'கலைச்சுடர்' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கம்போடியா சென்று வருவதற்கான அனுசரணையினை பிரபல தொழிலதிபர் எம்.சி. பஹருதீன் ஹாஜி அவர்கள் வழங்கியுள்ளார்.
வாழ்த்துக்கள், கவிஞரே
- மாலதி சந்திரசேகரன்