இளம்பருவத்தில் உடல் பருமன் சிகிச்சையானது நேர்மறையான உளவியல் விளைவுகளையும், உடல்நலம் குறித்த விழ்ப்புணர்வையும் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளது.
ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற இயல்பான எடை (பிஎம்ஐ) இல்லாமல் இருந்தால் உடல் பருமன் பிரச்னை உள்ளதாகக் கருதப்படுகிறது. ‘பிஎம்ஐ’ கணக்கீட்டின் அடிப்படையில் உடல் பருமன் பிரச்னையின் தீவிரத் தன்மையை மருத்துவா்கள் மதிப்பிடுகின்றனா். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்புச் சத்து சேருவதும் உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியமான காரணம்.
சமீபகாலமாக இந்தியாவில்தான் குழந்தைகள் அதிக அளவில் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் அதிகம் உள்ளவா்களுக்கு சுவாசக் கோளாறு, இதயக் கோளாறுகள், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், மூட்டு வலி, சில வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்னைகளும், மன ரீதியான பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர், முனைவர்.மேகன் கோவ் மற்றும் அவரது குழு இளம்பருவத்தில் உடல் பருமன் ஏற்படுவது, அவர்களது சிகிச்சை முறைகள், எதிர்காலத்தில் அவர்களது உடல்நிலை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.
இதில் இளம்பருவத்தில் குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, எதிர்காலத்தில் அவர்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.
மேலும், குழந்தைகளின் உடல் பருமன் பிரச்னை குறித்த 64 ஆய்வு முடிவுகளையும் கருத்தில் கொண்டு, அதன் முடிவுகள் மேலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குழந்தைகளுக்கு இளம்பருவத்தில் உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பது தொடர்ந்து எதிர்காலத்திலும் அவர்களது உடல் உருவத்தை மேம்படுத்த உதவுகிறது. மன ரீதியாகவும் மிகவும் வலிமையானவர்களாக மாறுகின்றனர். உடல் எடையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.