காய்கறிகள், பழங்கள் குறைவாகச் சாப்பிடுபவர்களுக்கு பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
சிறந்த உடலியக்க செயல்பாட்டிற்கு கார்போஹைட்ரேட் உணவு வகைகளைத் தவிர்த்து காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் பொதுவான அறிவுரையாக இருக்கிறது.
இந்நிலையில், இதுகுறித்து அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், காய்கறிகள், பழங்கள் குறைவாக உட்கொள்பவர்கள் பதற்றத்துடன் இருப்பார்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், அவர்கள் அதிகமாக கவலையுடன் காணப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
'தினமும் மூன்றுக்கும் குறைவான பழங்கள், காய்கறிகளை உட்கொள்பவர்களுக்கு 24% பதற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, உடல் அமைப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பிரச்னைகளையும் இதன் மூலமாக தெரிந்துகொள்ள முடியும். உடலில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது, கவலை, பதற்றமும் அதிகரிக்கும். அதே நேரத்தில் பாலினம், திருமண நிலை, வருமானம், சுகாதார பிரச்னைகள் ஆகியவைகளை பொறுத்து அவற்றின் அளவு வேறுபடுகிறது' என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று உலக மக்கள் தொகையில் 10% பேரின் இயலாமைக்கு காரணம் அவர்களிடம் காணப்படும் கவலைதான் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் உண்ணும் உணவிற்கும், நமது உணர்ச்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. உட்கொள்ளும் உணவுமுறைகளை பொறுத்தும் உணர்ச்சிகள் வேறுபடுகின்றன. எனவே, உங்கள் கவலை, பதற்றத்தைக் குறைக்க உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். உடலுடன் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.