மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மணப்பெண்கள் தங்கள் திருமணம் நடக்கும் இடத்திற்கு குதிரையில் சவாரி செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் கந்துவா பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் சாக்ஷி மற்றும் சிருஷ்டி. ஜனவரி 22ம் தேதி நடந்த இவர்களது திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வழக்கமாக மணமகன் குதிரையில் சவாரி செய்து அழைத்து வரப்படுவார். ஆனால், மாறாக இந்த சகோதரிகள், குதிரையில் சவாரி செய்து திருமணம் நடக்கும் மணமகன் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பெண்களின் தந்தை அருண் கூறும்போது, 'இது 400-500 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம். பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' (Beti Bachao, Beti Padhao) திட்டத்தினை ஆதரிக்கும் விதமாக இவ்வாறு செய்துள்ளேன். இந்நாட்டின் மகள்களை சமமாக நடத்த வேண்டும். எங்களுடைய பாரம்பரியமும் இதைத்தான் தெரிவிக்கிறது. அதனை நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம். மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இந்த நாட்டின் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
சகோதரிகள், இந்த சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம் என்று கூறினர். மணமகள்கள் இருவரும் குதிரையில் வலம் வரும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.