வேலை பாதுகாப்பின்மையை ஒரு மனிதனின் தனிப்பட்ட ஆளுமைத்திறனை மாற்றக்கூடும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொருளாதாரம், வேலை வாய்ப்பின்மை ஆகிய இரண்டும் பெரும் பிரச்னையாக உள்ளது. அதே நேரத்தில் வேலை கிடைத்த பெரும்பாலானோருக்கு வேலை பாதுகாப்பின்மை(job insecurity) என்பது பொதுவாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், வேலை பாதுகாப்பின்மை மனிதனின் வாழ்வில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், வேலை பாதுகாப்பின்மை ஒரு மனிதனின் தனிப்பட்ட ஆளுமையை மோசமாக மாற்றக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, வேலை பாதுகாப்பின்மைக்கு ஆளானவர்கள் குறைவான உணர்ச்சியையும், நிலையற்ற மனநிலை கொண்டவர்களாகவும் இருந்தது தெரிய வந்துள்ளது.
வேலை பாதுகாப்பின்மை ஒருவரது நல்வாழ்வு, உடல் ஆரோக்கியம், குறிப்பாக சுயமரியாதை உணர்வை பெரிதும் பாதிக்கிறது என்று ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்கின்றனர்.
சுமார் ஒன்பது ஆண்டு காலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் அளித்த பதில்களின் தரவுகளை வைத்து உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
உணர்ச்சி நிலைப்பாடு, உடன்பாடு, மனசாட்சிக்கு கட்டுப்படும் தன்மை, புற முக ஆளுமை உள்ளிட்ட மனிதனின் பண்புகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீண்டகால வேலை பாதுகாப்பின்மை, மேற்குறிப்பிட்ட மனிதனின் பெரும்பாலான பண்புகளை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் காலப்போக்கில் தன குறிக்கோளை அடையாமல் போவதற்கும் கூட வேலை பாதுகாப்பின்மை குறித்த மன அழுத்தம் காரணமாகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாதுகாப்பற்ற வேலை காரணமாக பணியாளர்கள் தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக வேலை செய்யவேண்டியிருக்கும். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு பிற்காலத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என ஆய்வாளர் வாங் கூறுகிறார்.
ஜர்னல் ஆஃப் அப்ளைடு சைக்காலஜி என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, வேலை பாதுகாப்பின்மையின் எதிர்மறையான விளைவுகள் குறித்து ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது.