உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதனை எதிர்த்துப் போராட கேரள அரசு ஒரு தனித்துவமான தீர்வை முன்னெடுத்துள்ளது. கரோனா தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ரோபோக்களை பயன்படுத்துகிறது.
இதன்படி, கேரளத்தில் ரோபோக்கள் முகமூடி அணிந்த நிலையில் முகமூடி மற்றும் கை சுத்தப்படுத்தும் திரவத்தினை மக்களிடம் விநியோகிக்கின்றன. இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காங்கிரஸ் எம்.பி சஷி தரூர் ட்விட்டரில் இதுகுறித்த ஒரு விடியோவைப் பகிர்ந்துள்ளார்.
மேலும் கரோனா வைரஸ் பரவுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அசிமோவ் ரோபோட்டிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயகிருஷ்ணன் டி இதுகுறித்து, கரோனா குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி, கரோனா மேலும் பரவாமல் தடுக்க ரோபோக்களின் மூலமாக பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் கூடும் பொது இடங்களை சுத்தம் செய்வதற்கும் மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு பொருட்களை வழங்கவும் ரோபோக்களை பயன்படுத்தலாம். இதன்மூலம் மனிதர்களுக்கு கரோனா பரவுதலை ஓரளவு தடுக்க முடியும். சோதனை முயற்சியாக இருக்கும் இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும் என்கிறார்.
கேரள அரசின் ஸ்டார்ட்அப் மிஷன் திட்டத்தின் மூலமாக இந்த ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து கரோனா எதிர்ப்பு பணிகளுக்கு மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் இவை பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.