வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இன்று நகரமயமாக்கல் வாழ்க்கையில் மறைந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆனால், கரோனா உள்ளிட்ட வைரஸ் தொற்றுகளின் காரணமாக மக்கள் இன்று இயற்கை உணவு முறைகளை நோக்கித் திரும்புகின்றனர். அந்த வகையில் நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் இருப்பதால் வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
► நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் சூடு குறையும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்த உதவும். முகப்பருக்கள் மறையும். சரும வறட்சியைத் தடுக்கும்.
► நல்லெண்ணெய்- ரோஸ் வாட்டர் அல்லது நல்லெண்ணெய்-எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் சரும வறட்சி நீங்கும். இதனை ஒரு பாட்டிலில் அடைத்து ஸ்பிரே போன்றும் பயன்படுத்தி வரலாம்.
► உதடு வெடிப்பு, உதடு வறட்சிக்கும் நல்லெண்ணெயைத் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்க முடியும்.
► மேக் அப் ரிமூவராக நல்லெண்ணெயைப் பயன்படுத்தினால் சருமம் பாதுகாப்பாக இருக்கும்.
► சருமம் கருமையாவதைத் தடுக்கும் நல்லெண்ணெய், தலைமுடி உதிர்வு, தலைமுடி வறட்சியை சரிசெய்ய உதவும்.
► வாரத்திற்கு ஒருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெயால் மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளித்து விடுங்கள். இப்படி செய்தால் உடல் சோர்வு என்பதே இருக்காது.
► கண்களில் கருவளையம் இருந்தால் இரவில் படுக்கும்முன் நல்லெண்ணெயை தடவி விட்டு உறங்கச் செல்லுங்கள். இதனால் தூக்கம் நன்றாக வருவதோடு விரைவில் கருவளையமும் மறைந்துவிடும்.