நீங்கள் ரொமான்டிக் பார்ட்னராக இருந்தால் ஒருவரது குறிக்கோள் மற்றொருவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வொன்று கூறுகிறது.
நீண்ட காலமாக காதல் தம்பதிகளாக இருப்பவர்கள் வாழ்வில் விட்டுக்கொடுக்கும் தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பவர்கள், பிற்காலத்தில் இருவரது குறிக்கோள்களிலும் மாற்றம் ஏற்படலாம் என பாஸல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 450 க்கும் மேற்பட்ட தம்பதிகள் பங்கேற்ற இந்த ஆய்வில், தம்பதிகளுக்குள் அணுகுமுறை, குறிப்பாக விட்டுக்கொடுக்கும் தன்மை, அவர்களது குறிக்கோள்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொரு 10-12 மாத இடைவெளியில் தம்பதியரிடம் இருந்து 14 நாள்கள் கருத்து கேட்கப்பட்டது. இதில் 456 ஆண்-பெண் தம்பதிகள் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களின் சராசரி வயது 34 ஆக இருந்தது. உறவின் கால அளவு 10 வருடங்கள் என இருந்தது. தி ஜர்னல் ஆஃப் ஜெரண்டாலஜியின் சமீபத்திய இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தங்களது வாழ்நாளில் எந்த சூழ்நிலையில் சண்டையிடுகிறார்கள், மோதல் வரும்போது யார் விட்டுக்கொடுக்கிறார்கள், அவர்களது வாழ்க்கையில் குறிக்கோளை அடைய ஒருவருக்கொருவர் எவ்வளவு உறுதுணையாக இருந்தார்கள் என்பது குறித்த ஆய்வில் சில சுவாரசியமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.
இவ்வாறான காதல் தம்பதிகளில் மோதலின்போது ஒருவர் விட்டுக்கொடுக்க முயற்சித்தால் மற்றொருவரும் விட்டுக்கொடுக்க முயற்சிக்கிறார். மாறாக, ஒரு நபர் தனிப்பட்ட வளர்ச்சியையும், அனுபவங்களையும் தேடும்போது, மற்றொருவரும் அதே வளர்ச்சியை அடைய விரும்புகிறார். அதேநேரத்தில் காலத்திற்கேற்ப இந்த குணநலன்கள், கொள்கைகளை மாற்றிக்கொள்கின்றனர். காலத்திற்கேற்ப நீண்டகால குறிக்கோள்கள் மாறுபடுகின்றன. இந்த மாற்றத்துக்கான காரணமாக, 'உறவின் ஸ்திரத்தன்மை' கூறப்படுகிறது. அதாவது அவர்களின் உறவுக்கு முக்கியத்தும் அளித்து குறிக்கோள்களை தளர்த்திக்கொள்கிறார்கள், உறவின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த இதனை பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.