இதய நோயாளிகளில் 30 சதவிகிதத்தினர் நீரிழிவு பிரச்சினையுள்ளவர்கள் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
யுரோப்பியன் சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி (ESC) இதழில் இந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனரி தமனி (இதய) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர், நீரிழிவு நோயுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆனால், இதுவே மொத்த மக்கள்தொகையில் 9 சதவீதம் மட்டுமே நீரிழிவு பிரச்சினையுள்ளவர்கள்.
புவியியல் மாறுபாடுகளைக் கொண்டும் பாதிப்பில் மாற்றம் இருந்தது. உதாரணமாக வளைகுடா நாடுகளில் இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே ஐரோப்பாவில் 20 சதவீதமாக இருந்தது.
நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகிய இரண்டிற்கும் பொதுவான ஆபத்து காரணி உடல் பருமன். இரண்டாவதாக ஊட்டச்சத்தின்மை. இந்த இரு காரணங்களாலேயே உடல் பருமன் மற்றும் நீரழிவு நோய் ஏற்படுவதாக பாரிஸில் உள்ள பிச்சாட் - கிளாட் பெர்னார்ட் மருத்துவமனையின் ஆய்வாளர் டாக்டர் இம்மானுவேல் தெரிவித்தார்.
மேலும் அவர், நீரிழிவு நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் உடல் பருமன் கொண்டவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இது நகரமயமாக்கல், உடல் செயல்பாடு, உணவு உட்கொள்ளல் ஆகிய காரணிகளைப் பொருத்து மாறுபடுகிறது என்று கூறினார்.
ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 45 நாடுகளில் நாள்பட்ட கரோனரி இதய நோய் அறிகுறிகள் கொண்ட 32,694 நோயாளிகளைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகத் கண்காணித்ததில் இந்த முடிவுகள் கிடைத்துள்ளன.
நீரழிவு நோய் கொண்ட இதய நோயாளிகளில் 38 சதவீதம் அதிகமாக இறப்பு விகிதம் பதிவானதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உடல்நலனுக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். ஒவ்வொருவரும் எடைக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும். ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தலை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என்று டாக்டர் இம்மானுவேல் தெரிவித்தார்.