கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் கடந்த 3 மாதங்களில் பயணம் தொடர்பான செயலிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பல ஐரோப்பிய நாடுகளில் பயணம் தொடர்பான செயலிகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் 2021 இரண்டாம் காலாண்டில் அதாவது ஜூலை- செப்டம்பர் காலகட்டத்தில் 104% அதிகரித்துள்ளது.
கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மொத்தமாக 14.3 கோடி பேர் இவ்வகையான செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். 2020 முதல் அரையாண்டை ஒப்பிடுகையில் தற்போதைய பயனாளர்கள் 14% அதிகம்.
கரோனா தொற்று காரணமாக பொதுப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. எனினும் 2021 ஜூலை-செப்டம்பர் மாதங்களில் மக்கள் பயணம் செய்வது அதிகரித்துள்ளதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதும் இதற்கு காரணம்.
புக்கிங்.காம் செயலி, ஜூலை 2021-இல் ஐரோப்பாவில் ஏறக்குறைய 30 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்தது. முந்தைய கோடை காலங்களைவிட நடப்பு ஆண்டு பதிவிறக்கம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. 2021 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ஒரு மாதத்திற்கு சராசரியாக 17 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆனால், ட்ரிப்அட்வைசர், ட்ரிவாகோ உள்ளிட்ட மற்ற தளங்களின் சராசரி பதிவிறக்கம் 2,67,000 ஆக உள்ளது.
வரவிருக்கும் மாதங்களில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பயண செயலிகளின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தங்குமிடம் தொடர்பான செயலிகளில் ஏர்பிஎன்பி(Airbnb) செயலி முதலிடத்தில் உள்ளது. 2021 ஜனவரி-ஆகஸ்ட் வரையில் 60 லட்சம் பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிகபட்சமாகி ஜூலை மாதத்தில் 12 லட்சம் பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதையும் படிக்க | இதயத்தைப் பாதுகாக்கும் 5 உணவுகள்!