வாஷிங்டன்: தோட்டப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்துள்ளதாக ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பிளஸ் ஒன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தோட்டப் பணிகளை வாரம் இருமுறை செய்யும் பெண்களின் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறைந்துள்ளதாக கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எவரும் இதற்கு முன் தோட்டப் பணிகளை செய்யாதவர்கள்.
தற்போதுள்ள மருத்துவப் பிரச்னை உள்ளவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தோட்டக்கலை உதவும் என்று கடந்தகால ஆய்வுகள் காட்டுகின்றன.
மக்கள் ஆரோக்கியமாக வாழ தோட்டக்கலை மூலம் மனநலத்தை மேம்படுத்த முடியும் என்று ஆய்வின் முதன்மை ஆய்வாளரும், சுற்றுச்சூழல் தோட்டக்கலைத் துறையின் எமரிட்டஸ் பேராசிரியருமான சார்லஸ் கை கூறியுள்ளார்.
இதையும் படிக்க | மறதிக்கு மருந்தாகும் உணவுகள் என்னென்ன?
26 முதல் 49 வயதுக்குட்பட்ட 32 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர். பங்கேற்றவர்களில் பாதி பேர் தோட்டக்கலை குழுக்கு ஒதுக்கப்பட்டனர். மற்ற பாதி பேர் கலை உருவாக்கும் குழுவுக்கு ஒதுக்கப்பட்டனர். இரு குழுக்களும் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை மொத்தம் எட்டு முறை இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில், தோட்டக்கலை குழு மற்றும் கலைக்குழு இரண்டு குழுக்களின் மதிப்பீடுகளை ஆராய்ந்த போது தோட்டக்கலை குழுவில் பங்கேற்றோர் மனநல ஆரோக்கியத்தின் முன்னேற்றத்தை உணர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கலைக்குழுவில் பங்கேற்றோரைக் காட்டிலும் தோட்டக்கலை குழுவில் பங்கேற்றோர் குறைவான மன அழுத்தத்தை உணர்ந்ததாக தெரிவித்தனர்.