விமானப் பயணம் என்றால் பயமா? இந்த 5 விஷயங்கள் உதவலாம்
By DIN | Published On : 16th June 2022 03:18 PM | Last Updated : 17th June 2022 06:05 PM | அ+அ அ- |

விமானப் பயணம் என்றால் பயமா? இந்த 5 விஷயங்கள் உதவலாம்
நாள்தோறும் விமானத்தில் லட்சக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். விமானப் பயணம் என்றாலே அது மிகவும் ஜாலியான விஷயமாக இருக்கும் சிலருக்கு.
ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லையே, சிலருக்கு விமானப் பயணம் என்றால் மிகவும் அச்சமூட்டுபவையாக இருக்கலாம். முதல் முறையாக விமானத்தில் பயணிப்பவர்களுக்கும், ஓரிரு முறை விமானத்தில் சென்றவர்களுக்கும் தற்போதும் ஒரு அச்சம் இருக்கத்தான் செய்யும்.
அப்படியே நீங்கள் விமான பயணத்துக்கு அச்சம் கொள்பவராக இருந்தாலும் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். உலக நாடுகளில் உங்களைப்போல் பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.
ஒரு வேளை, அந்த அச்சத்தை விரட்ட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நினைப்பது போல் அதனை எளிதாக விரட்டலாம். அச்சத்தைப் போக்க இந்த ஐந்து விஷயங்களைக் கடைபிடியுங்கள்.
நம்பிக்கை
நீண்ட தூரப் பயணங்களுக்கு குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு பயணிக்கும் போது விமானப் பயணமே சிறந்தது. அதில் விமானம் விபத்துக்குள்ளாகி மரணிப்பது என்பது எப்போதாவது நடக்கும் சம்பவம். எனவே நமது மூளை ஏன் எப்போதாவது நடக்கும் ஒரு விஷயத்தை எண்ணி அச்சம் கொள்ள வேண்டும். எனவே, நமது ஆழ்மன நம்பிக்கையே நமக்கு பல விஷயங்களில் தைரியத்தைக் கொடுக்கிறது. எனவே அதனை அதிகரிக்கச் செய்யுங்கள்.
அச்சத்தை எதிர்கொள்ளுங்கள்
ஒரு விஷயத்தை செய்யும் போது அச்சமாக இருந்தால், அதனை மீண்டும் மீண்டும் செய்யும் போது அச்சம் போய்விடும். புதிதாக சமைக்க வருவோர் கடுகு தாளிக்கும் போது கூட ஓடி விடுவார்கள். ஆனால், சமையலில் பழுத்தவர்கள் கொதிக்கும் பாத்திரத்தை சட்டெனத் தூக்கி அருகில் வைத்து விடுவது போலத்தான்.
இதையும் படிக்க.. அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்குங்க.. வைரலாகும் விடுமுறைக் கடிதம்
அடிக்கடி விமானம் புறப்படும் விடியோக்களைப் பார்க்கலாம்.
விமானம் பறக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
வெறும் ஆடியோவில் விமானம் பறக்கும் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
சில பல முறை விமான நிலையங்களுக்குச் சென்று விமானங்கள் புறப்படுவதை நேரில் பார்க்கலாம்.
சில பயணங்களை விமானத்தில் சென்று அச்சத்தைப் போக்கலாம்.
விமானத்தில் ஏறிவிட்டீர்கள்.. அப்போது
நாம் எப்போது அச்ச உணர்வுடன் இருக்கிறோமோ அப்போது நம்மால் நேர்மறையாக சிந்திக்க முடியாது. ஆழ்ந்து மூச்சு விடுங்கள், அமைதியாக ஒரு சில நிமிடங்கள் உட்கார்ந்தே இருங்கள். பிறகு உங்களது கவனத்தை திசைதிருப்ப முயலுங்கள். ஏதோ ஒன்றில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். சற்றுக் கடினம்தான். முயலுங்கள்.
வீட்டிலேயே இருக்க முடியுமா?
விமானப் பயணத்துக்கு பயந்து வீட்டிலேயே இருக்க முடியுமா? சரி வெளிநாடுகளுக்கு காரில்தான் செல்ல முடியுமா? முடியாதல்லவா? அந்த விமானப் பயணம் தரும் அச்சத்தை முதலில் உணருங்கள். இந்த விமானத்தில் பயணித்தால்தான் அந்த முக்கிய இடத்தைப் பார்க்க முடியும். அந்த நாட்டை அடைய முடியும் என்ற இலக்கை நினைத்து உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளலாம்.
இதை நீங்களே முடிவெடுக்கலாம்
இல்லை நீங்கள் சொல்வதெல்லாம் செய்தாகிவிட்டது. ஆனாலும் அச்சம் போகவில்லை. என்ன செய்வது என்று கேட்பவர்கள், அவசியம் எனில், மருத்துவரை நாடி, மன ஒருங்கிணைப்பு பெற தியானம் போன்ற சில எளிய முறைகளை பின்பற்றலாம்.