பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் இணையத்தில் தகவல்களைத் தேடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
எந்தவொரு சூழ்நிலையிலும் அறிவைத் தேடுதல் என்பது காலத்தின் தேவையாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக புத்தகங்கள் மூலமாக அறிவை வளர்த்துக்கொண்ட நமக்கு இன்று இணையம் தகவல்களை வாரி வழங்குகிறது. கையடக்க மொபைல்போனில் நொடியில் தகவல்கள் கிடைக்கும் அதிநவீன வளர்ச்சி யுகத்தில் இருக்கிறோம்.
அதிலும் கரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
ஒரு சராசரி தொழில் வல்லுநர் தினமும் 3.6 மணிநேரம் தகவல்களைத் தேடச் செலவிடுகிறார் என சமீபத்திய அறிக்கை கூறுகிறது. அதுபோல, தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் நாளில் பாதி நேரத்தை (4.2 மணி நேரம்) தங்கள் துறை சார்ந்த தகவல்களைத் தேடுகிறார்கள்.
அதிலும் இந்தியாவில் இணையத்தில் தகவல்களைத் தேடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஏனெனில், இந்த ஆய்வில் கூகுள், விக்கிபீடியா, க்யூரா ஆகியவை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்துவரும் வேகமான தொழில்நுட்ப, போட்டி உலகில் வேலை செய்யும் துறை சார்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்துகொள்வது அவசியமாவதாலும் பணியாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள தகவல்களைத் தேடுகிறார்கள்.
குறிப்பாக தொழில் முனைவோர் தங்கள் துறையில் சாதித்த நபர்களின் அனுபவங்களை உரையாடல்கள் மூலமாகப் பெறுகின்றனர். துறையில் இருந்து சரியான நிபுணரைக் கண்டுபிடித்து அவரது அனுபவங்களைப் பெற அனைவருமே முயல்கிறார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.